குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழா

சேலம், ஜூன் 18: சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி இணைந்து நடத்திய “உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழா” சட்டக்கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவில் சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி கிறிஸ்டோபர், முதன்மை சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான (பொ) தாண்டவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். “எதிர்காலக் கனவுகளில் திளைக்க வேண்டிய குழந்தைகள் வேலை பளுவினால் வாடி விடக்கூடாது” என்ற 2019ம் ஆண்டுக்குறிய குறிக்கோள் வாசகத்தோடு அனுசரிக்கப்பட்ட இவ்விழாவில், நீதிபதி கிறிஸ்டோபர் பேசுகையில், ‘ஒரு சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு குழந்தைகளின் மேம்பாடு எவ்வளவு முக்கியமானது என விளக்கியதோடு, சமூகப் பொறியாளர்களாக விளங்கும் வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறைப் பணியாளர்களுக்கும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பில் பெரும் பங்குள்ளது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் இருப்பது வேதனைக்குரியது. கல்வி மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக  விழிப்புணர்வு மூலமாகவே, குழந்தை தொழிலாளர் என்ற அவலத்தை ஒழிக்கமுடியும்,’ என்றார். தொடர்ந்து நீதிபதி தாண்டவன், இப்போதுள்ள மாணவர்கள் சட்ட அறிவும், சமூக அவலம் பற்றிய தெளிவும் அதிகமாகப் பெற்றுள்ளனர் எனக்கூறி பாராட்டினார். உதவி பேராசிரியை அன்ஷிபா வரவேற்றார். உதவி பேராசிரியை தான்யா சி.பால்சன் நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.

Related Stories: