மேட்டூர், ஜூன் 18: மேட்டூரில் கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பழுது நீக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் மின்பகிர்மான வட்டத்தில் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய நான்கு பகுதிகளில் 6,55,005 மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் நுகர்வோரின் வசதிக்காக பிரத்யோகமாக 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை குறைதீர்க்கும் கணினி மையம் நேற்று துவக்கப்பட்டது. மேட்டூர் மின்பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில், எம்எல்ஏ செம்மலை கணினி மையத்தை குத்துவிளக்கேற்றி திறந் வைதார். கண்காணிப்பு பொறியாளர் இந்திராணி, சேலம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ செம்மலை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு ஒரு பிரத்யோகமாக கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பழுது நீக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோர் தங்களின் இல்லங்களில் இருந்தபடியே புகாரை பதிவு சொய்யலாம். அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் மின்தடை சரி செய்யப்படும். காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை உடனுக்குடனும் சரி செய்யப்படும். இரவில் பதிவு செய்யப்படும் புகார்கள் மறுநாள் பகலில் சரி செய்யப்படும். இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1912, 1800- 4254 1912 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம். இதனால் மின் நுகர்வோருக்கு விரைவான சேவை கிடைக்கும் என்றார்.இந்நிகழ்ச்சியில் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன், நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மின்வாரிய பிரிவு நிர்வாகி சம்பத்குமார், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சாதிக்அலி, சின்னுசாமி, முருகன் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி நிர்மல்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.