சேலம், ஜூன் 18: ஓமலூரைச்சேர்ந்த விவசாயிகளின் 60 சிந்து பசு மாடுகளை மேகாலயாவில் விற்பனை செய்த நிலையில் அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வரும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மந்திரி, பூபாலன், பரமசிவம், உள்பட 8 பேர் சேலம் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரை நேற்று சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பது: நாங்கள் அனைவரும் விவசாயிகள். சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து அதனை விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம். சேலம் சங்கர் நகரை சேர்ந்த அசோக் என்பவர் எங்களது சிந்து வகையை சேர்ந்த 60 மாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்தார். மாடுகள் அனைத்தும் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது.