டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி மர்மச்சாவு

ஓமலூர்,  ஜூன் 18: ஓமலூர் அருகே, டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர்.ஓமலூர் அருகேயுள்ள தின்னப்பட்டியை  சேர்ந்தவர் அர்ச்சுனன்(50). இவர் சைக்கிளில்  சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று, ஐஸ் விற்பனை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம்  பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஐஸ் விற்பனை  செய்துள்ளார். மதியம் ஐஸ் தீர்ந்ததை அடுத்து, பெட்டியை கம்பெனியில் வைத்து கணக்கை ஒப்படைத்து விட்டு, நேற்று மாலை  சைக்கிளில் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்துக்கு சென்றார். அங்குள்ள  டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கிச்சென்று, எதிரே சாலையோரம்  உட்கார்ந்து  மது குடித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில்  அப்பகுதியில் காலி மது பாட்டில்களை சேகரிக்க வந்த மூதாட்டி,  சாலையோரம் கிடந்த அர்ச்சுனனை எழுப்பிய போது, அவரது உடலில் எந்த அசைவு இல்லை. இதுகுறித்து, பொதுமக்கள் மூலம் ஓமலூர் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,  அர்ச்சுனன் உடலை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமலூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து அவரது  உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  அர்ச்சுனன் மது குடித்ததில் இறந்தாரா, அல்லது யாராவது அடித்து கொலை  செய்தனரா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: