கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை, பணம் துணிகர கொள்ளை

புதுச்சேரி,  ஜூன் 18: புதுவை, அரியாங்குப்பத்தில் தனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சென்ற கல்வித்துறை அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள்  துணிகரமாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை,  அரியாங்குப்பம், சுப்பையா நகர், பூரணாங்குப்பம் வீதியில் வசிப்பவர் பிரேமா  (53). கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர்  அரிகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிரேமாவின் 2வது  மகளுக்கு திருமணம் முடிந்து நேற்று முன்தினம் கடலூர் ரோட்டில் உள்ள  மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக  பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று  முன்தினம் மாலை 7.15 மணியளவில் மண்டபத்துக்கு சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணிநேரம்  கழித்து பிரேமா வீட்டிற்கு ஒரு பொருளை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது  வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில்  வைத்திருந்த ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு  இருந்தது. திருமண வீட்டை நோட்டமிட்டு யாரோ மர்ம நபர்கள் வீட்டை உடைத்து  துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமா தனது  மகள்களுக்கு தகவல் கொடுக்கவே, அவர்களும், உறவினர்களும் வீட்டிற்கு  விரைந்து வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். பின்னர் இதுபற்றி  அரியாங்குப்பம் போலீசில் பிரேமா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி,  எஸ்ஐ புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று  பார்வையிட்டு அதிகாரியிடம் சம்பவம் பற்றி விசாரித்தனர். பின்னர் கைரேகை  நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  வழக்குபதிந்த போலீசார், நகை, பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி  வருகின்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: