வாதானூரில் மூடி கிடக்கும் ஏடிஎம் மையம்

திருக்கனூர், ஜூன் 18: திருக்கனூர் அருகே உள்ள வாதானூரில் சென்ட்ரல் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாதானூர், பிஎஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரி கிராம மக்களும், திருமங்கலம், ஆண்டிபாளையம், சேஷங்கனூர், குராம்பாளையம் உள்ளிட்ட தமிழக கிராமங்களை சேர்ந்த மக்களும் கணக்கு வைத்துள்ளனர்.  இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்காக, இந்த வங்கியில் அருகில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அங்கு பொதுமக்கள் சென்று தங்களது கணக்கில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த ஏடிஎம் மையம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பணம் எடுக்க வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.  இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை பொதுமக்கள் அணுகி கேட்டபோது, அவருக்கு தமிழ் தெரியாததால் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்துபோது, ஏடிஎம் இயந்திரம் கோளாறு ஏற்பட்டால், ஏடிஎம் மையத்தை மூடி வைத்திருப்பதாகவும், அதனை சரி செய்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: