×

வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு

புதுச்சேரி, ஜூன் 18:  புதுவையில் தொடர்ச்சியாக நகை பறிப்பில் ஈடுபட்டு வரும் வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைந்துள்ளது. புதுவையில் சமீபகாலமாக செயின் பறிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பெண்கள் வீட்டை விட்டு அதிகளவில் வெளியே வரும் தினங்களை நோட்டமிட்டு ஒருகும்பல் துணிகரமாக வழிப்பறி செய்கிறது. கோரிமேடு, லாஸ்பேட்டையில் பெண்களிடம் அடுத்தடுத்த நகை வழிப்பறி நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ருளையன்பேட்டையில் கணவர், மகனை தாக்கி பெண்ணிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்றது. இதையடுத்து பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நகை பறிப்பு தொடர் கதையாகவே போலீசாரின் இரவு ரோந்து பணியை
தீவிரப்படுத்திய சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, அவற்றை ஆய்வு செய்தார். இருப்பினும் இதுவரை வழிப்பறி ஆசாமிகள் யாரும் சிக்கவில்லை. இதனிடையே வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் குறித்து பெரியார் நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் கண்டனர். அவர்கள் சென்னையை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. இதையடுத்து வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க ஒரு தனிப்படை சென்னை விரைந்துள்ளது. இதனால் விரைவில் குற்றவாளிகள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...