புதுச்சேரி, ஜூன் 18: காரைக்கால் சிறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி அங்கு அடைக்கப்பட்டிருந்த 16 ஆயுள் தண்டனை கைதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் அரசலாற்றங்கரையோரம் கிளை சிறைச்சாலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பழமையான இந்த சிறைச்சாலை கட்டிடம் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதையொட்டி சிறைச் சாலை கட்டிடத்தில் மராமத்து பணிகள் மேற்கொண்டு சீரமைப்பதென சிறை துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக்கு மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 ஆயுள் தண்டனை கைதிகள் புதுவை சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்காக முள்ளோடை முதல் காலாப்பட்டு வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணிக்காக சாலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சிறை பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் அவர்கள் புதுவையில் இருந்து மீண்டும் காரைக்கால் சிறைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிகிறது. கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதையொட்டி கடலூர் சாலையில் புதுவை மாநில எல்லையான முள்ளோடையில் இருந்து பாகூர் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். தொடர்ந்து கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் அந்தந்த காவல் நிலைய போலீசார் கைதிகளை கொண்டு சென்ற வாகனங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.