×

ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரம் லாரி கேபினில் தூங்கிய டிரைவர் படுகொலை: சக டிரைவருக்கு வலை

பெரும்புதூர், ஜூன் 18: பெரும்புதூர் அருகே லாரி கேபினில் தூங்கிய லாரி டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (25). லாரி டிரைவர். சென்னை அருகே பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் இவருக்கு நடந்தது.இந்நிலையில், பெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து, பொருட்களை ஏற்றி செல்வதற்காக நேற்று முன்தினம் பாலசுந்தரம் லாரியில் வந்தார். பின்னர் லாரியை தொழிற்சாலை அருகே நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் பாலசுந்தரம் திடீரென மாயமானார். அப்பகுதியில் இருந்த மற்ற டிரைவர்கள் அவரை தேடியபோது லாரி கேபின் பகுதியில் தலையில் கற்கள் மற்றும் இரும்பு ராடால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவர், சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், பாலசுந்தரத்துக்கும், அதே டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த டிரைவர் கோபால் (36) என்பவருக்கும் குடிபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாலசுந்தரம், கோபாலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 இதன்பிறகு பாலசுந்தரம், லாரி கேபினில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.இரவு 9 மணியளவில், மீண்டும் அங்கு வந்த கோபால், அங்கிருந்த இரும்பு ராடால் பாலசுந்தரத்தின் தலையில் அடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார், தலைமறைவாக உள்ள கோபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு