திருப்போரூர், ஜூன் 18: திருப்போரூரில் நூதனமுறையில் பணம், செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்போரூர் அருகே, இள்ளலூர் சாலையில் வசிப்பவர் சதீஷ்குமார் (44). இவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் கஃபூர் (30) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் புதிதாக வாடகைக்கு வீடு எடுத்தார். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தங்கியுள்ளனர். திருப்போரூர் இள்ளலூர் சாலை சந்திப்பில் புதியதாக டீ கடை மற்றும் பழ ஜூஸ் கடை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு அப்துல் கஃபூர், தனது பணியை முடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்பினார். பின்னர், உணவு சாப்பிட்டு முடித்து நண்பர்களுடன் தூங்கினார். அப்போது அவர், கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளார்.
நள்ளிரவில்,வு 1 மணிக்கு மேல் வந்த 2 பேர், அறைக்குள் நுழைந்து அப்துல் கஃபூரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ₹87 ஆயிரம், அறையில் இருந்த ₹15 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்போன்களை திருடி சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது செல்போன்கள் மற்றும் பேன்ட் பாக்கட்டில் வைத்திருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 1.36 மணியளவில் 2 மர்மநபர்கள், மாடி படிக்கட்டில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.