மதுராந்தகம், ஜூன் 18: மதுராந்தகம் அடுத்த தண்டலம் ஊராட்சியை சேர்ந்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வாசுதேவன், அர்ஜூன்குமார் ஆகியோர், 14ம் தேதி மனு வழங்கினர்.அப்போது, மதுராந்தகம் தனி வட்டாட்சியர், மனு அளித்தவர்களிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியேறிய அவர்கள், குறிப்பிட்ட தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதாக தெரிகிறது. ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனை கண்டித்து, மதுராந்தகம் தேரடி தெருவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுராந்தகம் வட்ட செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, நிர்வாகிகள் பொன்னுசாமி, அர்ஜூன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.