சோளிங்கர், ஜூன் 18: சோளிங்கர் அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அரியூரிலிருந்து பெரிய வைலாம்பாடிக்கு பைக்கில் சென்றார். பெரிய வைலாம்பாடி ஏரி அருகே சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன்(30) என்பவர் ஓட்டி வந்த பைக்கும் சீனிவாசன் என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இதில் படுகாயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரனை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.