ஆற்காடு, ஜூன் 18: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தஞ்சாவூரான் பகுதியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(24), பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம்(20) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு செல்வபாண்டியன் தனது வீட்டின் முன்பு நின்றுக்கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக பைக்கில் வாலிபர் ஒருவர் சென்றார். அவரிடம், ‘ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய்'' என செல்வபாண்டியன் கேட்டாராம்.
இதைபார்த்த ஸ்ரீராம் மற்றும் அவரது 2 தம்பிகள், ‘ஏன் பைக்கில் சென்ற எங்களது நண்பரை திட்டுகிறாய்'' என கேட்டு தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் உள்ளிட்ட 3 பேரும் செல்வபாண்டியனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, செல்வபாண்டியன் நேற்று முன்தினம் ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்பதிந்து ஸ்ரீராம் மற்றும் அவரது தம்பிகள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.