அணைக்கட்டு, ஜூன் 18: ஊசூர் அடுத்த சேக்கனூரில் உறை குழியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த சேக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன், விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று பசுமாட்டை தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த செப்டிக் டேங்கிற்காக இறக்கபட்டிருற்த 9 அடி ஆழ உறை குழியில் மாடு தவறி விழுந்தது. இதைப்பார்த்த, அருகில் இருந்தவர்கள் மாட்டை மீட்க பல முறை முயன்றும் முடியாததால் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் கட்டியும் இழுத்தும் மாட்டை மீட்க முடியவில்லை. இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் வரவழைக்கபட்டு சுற்றியிலும் பள்ளம் எடுத்து, உறை குழியை உடைத்து அகலப்படுத்தி பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.