×

பேரணாம்பட்டில் மாங்காய் திருடியதை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து மகன் கைது, தந்தைக்கு வலை

பேரணாம்பட்டு, ஜூன் 18:  பேரணாம்பட்டில் மாங்காய் திருடியதை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து விழுந்தது. இதில் மகனை கைது செய்த போலீசார் தந்தையை தேடி வருகின்றனர். பேரணாம்பட்டு முருகர் கோயில் வீதியை சேர்ந்தவர் யுவராஜ்(28), விவசாயி. இவருக்கு கொத்தபள்ளி கிராமத்தில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் மாந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் தனுஷ்(17) என்பவர் மாந்தோப்பில் மாங்காய் திருடி கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த, யுவராஜ் தனுஷிடம் ஏன் மாந்தோப்பில் இருந்து மாங்காய் திருடுகிறாய் என்று கேட்டு கையால் அடித்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து, தனுஷ் வீட்டிற்கு சென்று தனது தந்தை செல்லப்பாண்டியனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு யுவராஜ் கொத்தப்பள்ளி கிராமத்திலிருந்து பேரணாம்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லப்பாண்டியன் மற்றும் தனுஷ் ஆகியோர் யுவராஜை வழிமறித்து சரமாரியாகி தாக்கினர். மேலும், தனுஷ் கத்தியால் யுவராஜின் வலது பக்க வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் குடல் சரிந்த நிலையில் பலத்த காயமடைந்த யுவராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் தனுஷ் மீது 5 பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். பின்னர், குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குடியாத்தம் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செல்லப்பாண்டியனை தேடி வருகின்றனர்.

Tags : Paranampattu ,
× RELATED ேபரணாம்பட்டு அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்