×

மகள் தற்கொலைக்கு காரணமான இளைஞர் மீது நடவடிக்கை வேண்டும்

கோவை,ஜூன்14: தனது மகளின் சாவுக்கு காரணமான இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.  கோவைப்புதூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் கங்காதாரன். இவரது மகள் அஸ்வினி கங்கா, கோவை க.க. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தனது வீட்டின் அறையில் அஸ்வினி கங்கா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான இளைஞரை கைது செய்ய வேண்டும் என அப்பெண்ணின் தந்தை கங்காதாரன்நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் தற்கொலை செய்து கொண்ட போது அவரது அறையில் உள்ள கடிதம் உள்ளிட்ட சில பொருட்களை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக எடுத்து சென்றனர். மறுநாள் காவல்நிலையத்திற்கு வரசொல்லி கையெழுத்து வாங்கினர்.எனக்கு எழுத படிக்க தெரியாது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகளின் செல்போன் கிடைத்தது. அதில் அவருக்கு ஒரு இளைஞர் மிரட்டும் வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் சம்பவத்தன்று இரவு எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் வீட்டிற்கு வந்து மிரட்டியுள்ளார். எனது மகளை மதம் மாறவேண்டும் அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனை அருகில் உள்ள அக்கம்பக்கத்தினர் என்னிடம் தெரிவித்தனர். மதம் மாற விருப்பம் இல்லாத எனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை குனியமுத்தூர் காவல்துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகள் எழுதிவைத்த கடிதத்தை பார்க்க வேண்டும் என கேட்டாலும் போலீசார் தர மறுக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை