×

கருமத்தம்பட்டியில் புதிய நூலகம் கட்டட பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

சோமனூர், ஜூன் 14: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த நூலகம், கடந்த 1998ம் ஆண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையம் எதிரே சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2009ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது இந்த நூலகம் கையகப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டது. அப்போது அதற்கான இழப்பீட்டுத் தொகையையும், கோவை மாவட்ட நூலகத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. அப்போது நூலகம் அமைப்பதற்கு அரசு கட்டிடம் கிடைக்காததால், கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.தற்போது 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நூலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் அமைப்பதற்காக மீண்டும் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் அருகே உள்ள ஐந்து சென்ட் நிலம் நூலகத்திற்காக கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இடம் வழங்கப்பட்டதை அடுத்து, கோவை மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு மாவட்ட நூலகத் துறை சார்பில் கருமத்தம்பட்டியில் புதிய நூலகம் கட்டுவதற்கு ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஐந்து சென்ட் இடத்தில் இரண்டு மாடி கட்டிடம் அமைத்து, இங்கு முழு நேர நூலகம் அமைய இருக்கிறது.கருமத்தம்பட்டி நூலகத்தில் 5 ஆயிரம் வாசகர்களும் 30 ஆயிரம் புத்தகங்களும் உள்ளது. ஆனால் நூலகத்தை சரியாக பயன்படுத்துவதற்குரிய வசதிகள் இல்லை. இதனால் நகரின் மத்தியில் நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற வாசகர்கள்  கோரிக்கையை ஏற்று மாவட்ட நூலகம் சொந்த கட்டிடத்தில் நூலகம் அமைக்க முன் வந்தது.  தற்போது நூலகம் கட்டுவதற்கான பணி மந்த கதியில் நடந்து வருவதால், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Karumathampatti ,
× RELATED கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா