ஈரோடு, ஜூன் 14: ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கரும்பு, நெல், தென்னை ஆகியவற்றிக்கு அடுத்தபடியாக எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக, நடப்பாண்டில் பரவலாக மழை பெய்ததாலும், கீழ்பவானியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் எள், நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை உலர்த்த வசதியாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு உலர்களம் அமைத்து கொடுக்கப்பட்டது.தலா ரூ.2.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உலர்களங்கள் பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் உலர்களங்கள் இருந்ததற்கான அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:அடுத்த மாதத்தில் இருந்து மாவட்டத்தில் எள், நிலக்கடலை அறுவடை துவங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் அமைக்கப்பட்ட உலர்களங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பயனற்று கிடக்கிறது. உலர்களங்கள் அமைத்துக் கொடுத்தது ஒழுங்குமுறை விற்பனை கூடம். இதை பராமரிக்கும் பணியை அந்தந்த ஊராட்சிகள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஊராட்சி நிர்வாகங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தான் பராமரிக்க வேண்டும் என்று பதிலளிக்கின்றனர். இந்த இரு துறைகளில் உள்ள பிரச்னையால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகிேறாம். வேறு வழியின்றி வாகனங்கள் செல்லும் சாலைகளை உலர்களங்களாக பயன்படுத்த வேண்டி உள்ளதால், விவசாயிகளுக்கு பொருள் விரயம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.