×

தொகுப்பு வீடுகளை பராமரிக்க நிதி ஒதுக்க வலியுறுத்தல்

க.பரமத்தி ஜூன் 14: க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், உள்ளிட்ட 30 ஊராட்சிகள் உள்ளன.
இதில் உள்ள வெவ்வேறு குக்கிராமங்களில் ஏழை எளிய ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். தினகூலி தொழில் வேலை செய்து வரும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டித்தரக்கோரி 31 ஆண்டுக்கு முன்பு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் முறையிட்டனர். இதன்பயனாக அரசு மூலம் அந்தந்நத ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் கான்கிரிட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு ஏழை எளிய ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுப்பு வீடுகள் முறையாக கட்டப்படாததால் கட்டிய சில ஆண்டுகளிலேயே வீட்டின் உள்ளே மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தன. தற்போது தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமாகி குடியிருப்போர் வீடு இருந்தும் வாசலில் உறங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் தேங்கி நின்று குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூறாவளி காற்று ஏற்பட்டால் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சூறாவளி காற்றோ ஏற்பட்டால் வீடுகள் இடிந்து விழுந்து பொருள்சேதம் அல்லது உயிர் சேதம் ஏற்படும் எனவே ஒன்றியம் முழுவதும் உள்ள பழைய தொகுப்பு வீடுகளை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து வீடுகளை பராமரிக்க தேவையான நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா