ஓமலூர் வட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க மானிய உதவி

ஓமலூர், ஜூன் 14: ஓமலூர் வட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க மானிய உதவி வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஓமலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓமலூர் வட்டார தோட்டக்கலைத்துறையின் மூலமாக, சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள், சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 700 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் 575 ஏக்கர் பரப்பளவிற்கு சொட்டுநீர் பாசனம் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில், கிராமங்கள்தோறும் முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மேலும், இத்துறையின் மூலமாக காய்கறி நாற்றுகள், பழச்செடிகள், காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. ஓமலூர் வட்டார விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயனடையலாம். மேலும், தகுந்த ஆவணங்களுடன் முத்துநாயக்கன்பட்டி சாலையில் உள்ள பனங்காடு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: