முக்காணியில் தாயை அடித்துக் கொன்ற ரவுடி கைது

ஆறுமுகநேரி, ஜூன் 14:  முக்காணியில் தாயை அடித்துக்கொன்ற  ரவுடியை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி மாவட்டம், முக்காணி யாதவர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரபுத்ரன். இவரது மனைவி நட்டார் அம்மாள் (62). இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். இதில் ஒரு மகன், மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகன் மல்லி என்ற மலையாண்டி (32) கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்தபிறகு நட்டார் அம்மாள் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே மதுபோதைக்கு ஆளான மலையாண்டி, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அடிக்கடி நட்டார் அம்மாளிடம் நச்சரித்தார். ஆனால், இதை ஏற்காததால் இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதே போல் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மலையாண்டி, உருட்டுக் கட்டையால் நட்டார் அம்மாள் அடித்துக் கொன்றார். தகவலறிந்து விரைந்துவந்த ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து பழையகாயல் பகுதியில் பதுங்கியிருந்த மலையாண்டியை கைதுசெய்தனர். அப்போது  அவர் தனக்கு திருமணம் செய்துவைக்க மறுத்ததால் தாயை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு ஸ்பிக்நகர்-அத்திமரப்பட்டி விலக்கில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் உறவினர் ஒருவருடன் சென்று மலையாண்டி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார் தேடி வந்த நிலையில், சில நாட்கள் கழித்து முக்காணி பகுதியில் அரிவாளுடன் திரிந்த மலையாண்டியை ஆத்தூர் போலீசார்  கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதே போல் கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக முக்காணி பஞ்சாயத்து துணைத்தலைவி கணவர் கோட்ைடமுத்து கொலையான சம்பவத்திலும் மலையாண்டி கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இவர் மீது கொலை வழக்கு மட்டுமின்றி பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ள விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான்  தாயை அடித்துக் கொன்ற வழக்கில் போலீசார் இவரை கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: