மணப்பாறை, ஜூன் 13: மணப்பாறை அருகே குடிநீருக்காக கிராம மக்கள் படும் அவலத்தை கண்டு, தனது கிணற்று நீரை விவசாயி ஒருவர் இலவசமாக விநியோகம் செய்து வருகிறார். விவசாய பயிர்களுக்கு கூட நீரை பாய்ச்சாமல் கடும் வறட்சியிலும், குடிப்பதற்கு தண்ணீரை இலவசமாக வழங்குவதால் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.மணப்பாறை அருகேயுள்ள அழககவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, விவசாயி. இவருக்கு சொந்தமாக மானாங்குன்றம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது தோட்டம் அமைந்துள்ள மானாங்குன்றம் பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 7 மாதமாக கடுமையான குடிநீர் பஞ்சத்தால் பல கி.மீ. தூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வந்துள்ளனர். மேலும், அப்பகுதியில், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை வழங்கப்படும் காவிரி குடிநீர் 3 குடம் மட்டுமே கிடைப்பதாகவும், பற்றாக்குறைக்கு தண்ணீர் லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் தண்ணீர் ரூ.5 வீதம் விலை கொடுத்து மக்கள் வாங்கி வந்துள்ளனர். மானாங்குன்றத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தை தொடர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை அறிந்த விவசாயி பழனிசாமி, தனது கிணற்றில் உள்ள தண்ணீரை தினந்தோறும் இலவசமாக வழங்கி வருகிறார். மின் மோட்டார் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, பொன்னுசங்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்தினர் சைக்கிள், இருசக்கர வாகனம் மட்டுமின்றி நடந்து சென்றும் தண்ணீரை பிடித்து வருகின்றனர்.