டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 26ம் தேதி துவக்கம்

திருச்சி, ஜூன் 13: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 26ம் தேதி துவங்க உள்ளது.தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தொகுதி-4க்கான தேர்வு செப்.1ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் நாளை (14ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 14.7.2019 ஆகும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு பற்றிய விவரம் மற்றும் தேர்வுக்கான கட்டணம் போன்ற விவரங்கள் www.tnpsc.gov.in, tnpsc.exams.net, tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தால் இலவச பயிற்சி வகுப்பு வரும் 26ம் தேதி முதல் துவக்கப்படவுள்ளது. மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், திருச்சி மற்றும் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முசிறி, மணப்பாறை ஆகிய இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் நகலுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: