ஆல் இந்தியா ரேடியோ நகரில் கழிப்பறை அமைத்து தர கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்கு உட்பட்ட ஆல் இந்தியா ரேடியோ நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடு மற்றும் குடிசைகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள். பலரது குடிசை வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண்களும் சிறுவர்களும் இரவு நேரத்தில் ரயில் தண்டவாளம் ஓரம் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

மேலும் இரவு நேரத்தில் பெண்கள் தனியாக போகும்போது அந்த வழியாக போதை ஆசாமிகள் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றனர்.

இதனால் இரவில் பெண்கள் இயற்கை உபாதைக்காக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்தப்பகுதியில் மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் இலவச கழிப்பறை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாதர் சங்க நிர்வாகிகளுடன் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்துக்கு நேற்று காலை முற்றுகையிட வந்தனர். தங்களுக்கு கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று தர்ணா போராட்டம் நடத்தவும் முயற்சித்தனர். அப்போது இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர். இதனால் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: