வி.கே.புரம், ஜூன் 13: தாமிர பரணியை மாசில்லாமல் பாதுகாக்கும்பொருட்டு நதியை சுத்தம்செய்ய தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய மக்களவையில் குரல் கொடுப்பேன் என சிவந்திபுரம் மற்றும் அடையக்கருங்குளம் ஊராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஞானதிரவியம் எம்பி தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கிழக்கு மாவட்ட திமுக பொருளாளரும், ஒன்றியச் செயலாளருமான ஞானதிரவியம் எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவந்திபுரம், அடையக்கருங்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை மாசில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடுசெய்ய மக்களவையில் குரல் கொடுப்பேன். அமலி பள்ளி அருகே உள்ள சாலையை சீரமைக்க கலெக்டரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பேன், பாபநாசம் அணையை பழைய முறைப்படி கலெக்டரின் உத்தரவு பெற்று குறித்த நேரத்தில் திறக்க வலியுறுத்துவேன்’’ என்றார். நன்றியறிவிப்பின் போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பீடித் தொழிலாளர்கள் வாரந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.