மாடு மாலை தாண்டும் திருவிழா

மணப்பாறை, ஜூன் 12: மணப்பாறையை அடுத்த எலமனம் குளத்துப்பட்டியில் எருதுகுட்டை சாமி கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சிக்காக 14 ஊர் மந்தைகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின் கோயிலில் இருந்து ஒரு கி.மீ.  தூரத்திற்கு காளைகள் அழைத்துச் செல்லப்பட்டது. இதனையொட்டி, கோயில் அருகே எல்லைக்காக இருபுறமும் பச்சை மூங்கில் நடப்பட்டு வேப்பிலையால் தோரணம் கட்டப்பட்டு, தரையில் ஒரு துணியும் விரிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து உறுமி சப்தம் முழங்க திரண்டிருந்த கூட்டத்தினரின் கரகோஷத்தில் காளைகள் எல்லையை நோக்கி போட்டி போட்டுக் கொண்டு மின்னலாய் பறந்தது. இப்படி வந்த நூற்றுக்கணக்கான காளைகளில் முதல் காளை எல்லையை தாண்டித்துக் குதித்து வெற்றி பெற்றது. அப்போது கூடியிருந்தவர்கள் காளை மீது மஞ்சள் பொடியை தூவினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் இலக்கை அடைந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக பீரோ, 2ம் பரிசாக ஒரு கிராம் தங்க காசு, குத்துவிளக்கு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. விமரிசையாக நடைபெற்ற மாடு மாலை தாண்டும் விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தா.பேட்டை: தா.பேட் டை அருகே தொட்டியப்பட்டி பெருமாள் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில் மேம்படவும், மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதற்காக பதினைந்துக்கும் மேற்பட்ட மந்தைகளிலிருந்து மாடுகளை அலங்கரித்து பெருமாள் கோயில் திடலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கு கோயில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரு கி.மீ. தூரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து வாலிபர்களும், மந்தைக்குட்பட்ட முக்கியஸ்தர்களும் அதை ஓட்டி வந்தனர். அப்போது மாடுகள் அதிவேகமாக ஓடி வந்தது. இதில் மணப்பாறை அருகே வையம்பட்டி பகுதியை சேர்ந்த கோயில் மாடு மாலை தாண்டியது. இதையடுத்து அந்த மாட்டிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Related Stories: