காரைக்கால், ஜூன் 12: காரைக்கால் பாரதியார் வீதி, மாதாகோவில் வீதியை தொடர்ந்து, காமராஜர் சாலையில், சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமையில் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் கூட்டப்பட்டு, நகர் பகுதியில் உள்ள சாலை மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 3ம் தேதி காரைக்கால்
பாரதியார் சாலை, நேரு வீதி, தோமாஸ் அருள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. பாரதியார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறும்போது, வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.