திருவெண்ணெய்நல்லூரில் பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 12: திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளை பொன்முடி எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியின் மையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணியால் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி வழியாக செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் சுற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருக்கோவிலூர் எம்எல்ஏவுமான பொன்முடி துக்க நிகழ்வுக்காக திருவெண்ணெய்நல்லூர் வந்தார். அப்போது அப்பகுதி திமுகவினர் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு சென்று பாலம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலம் அமைக்கும் பணியை 15 நாட்களுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கலைச்செல்வியிடம் கூறினார். அப்போது மாவட்ட பொருளாளர் புகழேந்தி, திமுக ஒன்றிய செயலாளர் விசுவநாதன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் கவுன்சிலர் விஜயபாபு, ஒன்றிய இளைஞரணி  செயலாளர் நிர்மல்ராஜ், வழக்கறிஞர்கள் சுரேஷ்பாபு, கார்த்திகேயன், முன்னாள் நகர செயலாளர் செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: