×

காரைக்காலில் 10 கோயில்களில் உண்டியல் எண்ணும் பணி

காரைக்கால், ஜூன் 11: காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாண பெருமாள் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகா மாரியம்மன் ஆலயம், காரைக்கால் அம்மையார், நித்யகல்யாண பெருமாள், சோமநாதர், கைலாசநாதர், அய்யனார் ஆகிய பத்து கோயில்கள் உள்ளது. இக்கோயில்களின் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். தற்போது பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் அனைத்து கோயில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் வாரியம் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று நேற்று காலை உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள தொகை  எண்ணும் பணி தொடங்கியது.  இந்த பணி அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. இப்பணியில் சுமார் 30 அரசுத்துறை ஊழியர்களும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். வசூலான தொகை 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டது.

Tags : temples ,Karaikal ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...