முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கு கல்விஉதவி

புதுச்சேரி, ஜூன் 7: புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயணா ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மறுவேலைவாய்ப்பு பெற்றிடாத மற்றும் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இடம் பெறாதவருமான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி படிப்பிற்கான 2018-19ம் கல்வியாண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத்துறை மூலம் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை அலுவலக நாட்களில் வழங்கப்பட உள்ளது.

எனவே, இதற்கு தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் தங்களது அடையாள அட்டையுடன் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது சம்பந்தமாக, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையாளர்கள் அந்தந்த தலைமை கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசல் பள்ளி கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத்துறையில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி. காலம் கடந்து சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: