திருச்சி, மே 25: திருச்சி உயரழுத்தக் கொதிகலன் ஆலை மற்றும் இணைப்பில்லா எக்கு குழாய் ஆலை, திருமயத்திலுள்ள மின்னாலைக் குழாய்கள் பிரிவு, பஞ்சாப் மாநிலத்தின் கோயிந்த்வாலிலுள்ள தொழிலக வால்வுகள் பிரிவு மற்றும் சென்னையிலுள்ள குழாய்கள் மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருச்சி பெல் வளாகத்திற்கு செயலாண்மை இயக்குநராக பத்மநாபன்(57) பதவி உயர்வு பெற்றார். பொறியியல் பட்டதாரியான பத்மநாபன், பெல் திருச்சி பிரிவில் 1983ம் ஆண்டு பொறியியல் பயிலுநராக சேர்ந்தார். திருச்சி, டில்லி தலைமையகம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். பெல்லின் ஆரம்பப் பயிற்சிக்குப் பின், படிமக் கொதிகலன் வணிகத் துறையில் பணியமர்த்தப்பட்ட அவர், விரைவாக வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் திட்ட மேலாண்மை போன்ற பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றதுடன், வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவு அடைவதை உறுதி செய்வதில் புகழ்பெற்றார். 2013ம் ஆண்டு பொது மேலாளர், 2017ல் திருச்சி பிரிவில் வணிக மேம்பாட்டுத் துறைக்கு தலைமை, பின்னர் புறத் தயாரிப்புகள் துறைக்கு தலைமை, டில்லி தலைமை அலுவலகத்திற்கு பொதுமேலாளர் (பொ) மாற்றல் பெற்று, குழும தரம் மற்றும் வணிக உன்னதத் துறைக்கு தலைமையேற்றார். இவர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் திருச்சி பெல் வளாகத்தின் பொது மேலாளராக பொறுப்பு வகித்தார்.