மணப்பாறை கிராமப்பகுதியில் இடியுடன் பெய்த கனமழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

மணப்பாறை, மே 25:  மணப்பாறை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  கடந்த சில மாதங்களாக கொளுத்தி வரும் வெயிலின் கடுமை மற்றும் தற்போதுள்ள  கத்திரி வெயிலின் தாக்கத்தாலும் அனைத்து பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மணப்பாறையை சுற்றியுள்ள புத்தாநத்தம், பண்ணாங்கொம்பு, பொய்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் திடீரென நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழை ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாகவும் மற்ற பகுதிகளில் சுமார்  ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பலத்த காற்றுடன் பெய்தது. கடுமையான வெயிலால் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வந்த மக்கள் இந்த திடீர் மழையால் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். வாகன ஓட்டிகள், சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி உற்சாகமாக சென்றனர். வெயிலின் தாக்கத்தாலும் குடிநீர் பற்றாக்குறையாலும் மழை பெய்யாதா என ஏக்கத்தில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது பெய்த மழை மகிழ்ச்சியை தந்தது. ஆனால், மணப்பாறை நகர பகுதிகளில் இந்த மழை பெய்யாமல் ஏமாற்றத்தை அளித்தது.

Related Stories: