திருச்சி, மே 25: பலத்த காற்றுடன் வானம் இருண்டதை கண்டு நேற்று மாலை மழை பெய்யும் என நம்பிய திருச்சி மக்களை இயற்கை ஏமாற்றியது.இந்தாண்டு கத்திரி வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த மாதம் துவங்கிய அக்னி நட்சத்திரம் வரும் 29ம் தேதி வரை அதனின் வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. வெளியில் நடமாட முடியாமல் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி வெயில் அதன் உக்கிரத்தை காட்டும் அதே வேளையில் நேற்று மாலை 4 மணியளவில் மாநகரில் மேகங்கள் இருட்டிக்கொண்டும் காற்று பலமாக வீசி மழை பெய்வதற்கான அறிகுறியை காட்டியது. பலத்த மழை பெய்து வெப்பத்தை குறைக்க போகிறது என பொதுமக்கள் நம்பிய சில நொடிகளில் வீசிய பலத்த காற்று நின்றதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். புழுக்கத்தால் இரவு முழுவதும் அவஸ்தை அடைந்தனர். ஆனாலும் மாநகரில் பொன்மலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையானது வெப்பத்தினை மேலும் அதிகப்படுத்தியது.