ரசாயன உரங்களுக்கு புதிய விற்பனை விலை அறிவிப்பு

பாபநாசம், மே 25:  அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வட்டாரத்தில் தற்போது அனைத்து உர கடைகளிலும் குறுவை சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 17ம் தேதியன்று உள்ளவாறு ரசாயன உரங்களுக்கு புதிய விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 17ம் தேதிக்கு பிறகு பேக்கிங் செய்யப்படும் உரங்களின் மூட்டை மேல் புதிய விலை குறிப்பிடப்படும். தற்போது உர விற்பனையாளர்கள் தங்கள் கைவசம் வைத்துள்ள உர ஸ்டாக்குகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது. எனவே விற்பனையாளர்கள் உர மூட்டைகளின் மேல் குறிப்பிடப்பட்டுள்ள பழைய விலையிலேயே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். அந்த விலையை கறுப்பு மை கொண்டு அழித்தோ, ஸ்டிக்கர் ஒட்டியோ மாற்றம் செய்து விற்க கூடாது. இவ்வாறு செய்வது இந்திய அரசின் உர கட்டுப்பாட்டு ஆணையின்படி குற்றமாகும். எனவே உரங்களை வாங்கும் விவசாயிகள் பாயிண்ட் ஆப் சேல் எனப்படும் உர விற்பனை மிஷினில் பட்டியல் பெற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: