திருவையாறு, மே 25: திருவையாறு அருகே பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அமம்மன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுகுமார் (26). இவர் நேற்று காலை 11 மணியளவில் திருவையாறில் இருந்து அம்மன்பேட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அரசூர் அருகே இருசக்கர வாகனத்தை மறித்து சுகுமாரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்சை வரவழைத்து சுகுமாரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரிவாள் வெட்டு சம்பவத்தால் தஞ்சை- திருவையாறு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.