×

மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் பெற அழைப்பு

மணமேல்குடி, மே 25: மணமேல்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் மானியத்தில் சொட்டுநீர்  தெளிப்பு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம். வேளாண்மை உதவி இயக்குநர்  ஆதிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரியின் நீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. மணமேல்குடி  வட்டாரத்தில் 2018 ம் ஆண்டு பெய்த மழை அளவானது 702.1 மிமீ. இதனால் கண்மாய்கள் அனைத்தும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை  தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில புல வரைப்படம், சிறு குறு விவசாயிக்கான சான்று, புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டையுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  அதிகபட்சமாக  ஒரு விவசாயி 5  எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்கலாம். இதர விவசாயிகளுக்கு சிறு குறு விவசாயி சான்று தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா