குளித்தலை, மே25: அய்யர்மலை அரசுகலைக்கல்லூரியில் மாணவர்சேர்க்கைககான கலந்தாய்வு நடைபெற்றது.இதில்பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பிஎஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், பிசிஏ., பி.காம்., பி.காம்.(சி.ஏ) ஆகிய 12 பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சோக்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் வழங்கப்பட்டது.இதில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதிக்குள் இக்கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெறும் தேதிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக்கல்லூரியில் உள்ள இளங்கலை பட்டபடிப்பான பி.காம்., பிபிஏ., பி.காம்.(சி.ஏ) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் முதல் நாள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் அறிவியல், மின்னணுவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், பிசிஏ மற்றும் வேதியியல் ஆகிய பாடப்பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.மூன்றாம் நாள் பிஏ.தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த வருடம் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் அரசு கலைக்கல்லூரியில் அதிக அளவில் ஆர்வத்துடன் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.