×

சாலையோரத்தில் நிறுத்தியிருக்கும் வேன்களில் இருந்து எல்.இ.டி டி.விகளை திருடிய வாலிபர் கைது

ஆவடி, மே.25; ஆவடி, காமராஜர் நகர், முதல் தெருவைச்சேர்ந்தவர் நரேஷ் (31). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு நரேஷ் வேலை முடிந்து தன்னுடைய வேன் ஒன்றை காமராஜர் நகர், 10வது தெருவில் உள்ள கோயில் அருகில் நிறுத்திவைத்திருந்தார். பின்னர், அவர் நேற்று காலை மீண்டும் வேனை எடுக்க அங்கு வந்தார். அப்போது வேனில் இருந்த எல்.இ.டி டிவி திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நரேஷ், ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.ஐ மணிமாறன் ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து எல்.இ.டி டிவியை திருடிய மர்ம நபர்களை தேடினர்.    இந்நிலையில் நேற்று காலை காமராஜர் மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக எல்.இ.டி  டிவி எடுத்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், செங்குன்றம், அம்பேத்கர் நகர், பெருமாள் அடிப்பாதம் பகுதியைச் சேர்ந்த துரை (27) என்றும் வேனிலிருந்து எல்.இ.டி டிவியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

 மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 10 எல்.இ.டி டிவிகளை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்  ஏற்கனவே கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் வேன்களில் இருந்து டிவி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் துரையை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...