×

மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் கடும் வெயிலில் தவிக்கும் பெண்கள்

காஞ்சிபுரம், மே 25: காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள மணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மேற்கூரை இல்லாததால், அங்கு வரும் பெண்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இங்கு நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.காஞ்சிபுரத்தில் பெரியார் நகர், மாமல்லன் நகர், மின் நகர், காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு, அறப்பெரும்செல்வி தெரு, கோனேரிக்குப்பம், வைகுண்டபெருமாள் கோயில் தெரு, காமராஜர் தெரு, தந்தை பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான 13க்கும் மேற்பட்ட ரேஷன்கடைளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.

13க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கிடங்கு மூலம் மண்ணெண்ணெய்  விநியோகம் செய்வதால், ஒரு நாளைக்கு சுமார் 1000 பேர் மண்ணெண்ணெய் வாங்கிச் செல்கின்றனர். இதனால், தினமும் அதிகாலையிலேயே இங்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் மண்ணெண்ணெய் வாங்க வரும் பொதுமக்கள், வெயிலில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் மண்ணெண்ணெய் வாங்க வரும் பெண்கள், முதியோர் கடும் சிரமம் அடைகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதியும், நிழலான இடமும் இல்லை. சிலர், வெயில் தாக்கம் தாங்க முடியாமல், மயங்கி விழுகின்றனர். எனவே, வெயில் மற்றும் மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண்ணெண்ணெய் கிடங்கு அருகே நிழற்பந்தல் அல்லது மேற்கூரை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Tags : Women ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...