ஓட்டேரியில் அதிகாலையில் பரபரப்பு செருப்பு குடோனில் தீ விபத்து

பெரம்பூர்: ஓட்டேரியில் உள்ள செருப்பு  குடோனில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மல் (47). இவருக்கு  சொந்தமான செருப்பு குடோன் ஓட்டேரியில் உள்ளது.  இங்கு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும்  ஊழியர்கள் வழக்கம்போல் குடோனை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே ஓட்டேரி போலீசாருக்கும், தீயணைப்பு  துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து,  5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடோனில் இருந்த செருப்புகள், செருப்பு  தயாரிக்கும் லெதர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. கம்பெனியில் யாரும் இல்லாததாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது யாராவது தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.  அதிகாலை நடந்த தீவிபத்து சம்பவத்தால் ஓட்டேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: