பெரம்பூர்: ஓட்டேரியில் உள்ள செருப்பு குடோனில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மல் (47). இவருக்கு சொந்தமான செருப்பு குடோன் ஓட்டேரியில் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம்போல் குடோனை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே ஓட்டேரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.