ஆவடி: ஆவடி நகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கோபாலபுரம், தென்றல் நகர், கோபாலபுரம் மேற்கு, குறிஞ்சிமா நகர், சித்தேரிகரை, முல்லை நகர், மாங்குளம், தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் பிறந்த நாள், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் விழா, வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி வந்தனர். இதற்காக ஏழை மக்கள் பல ஆயிரம் செலவு செய்ய வேண்டியது உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக கடந்த 2002ம் ஆண்டு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய சட்டமன்ற நியமன உறுப்பினர் சாண்ட்ரா டான் கிரேவால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்ட ₹6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி 2004-05ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் பட்டாபிராம், கோபாலபுரத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, சமுதாய கூடத்தை விரிவுபடுத்திட நகராட்சி நிர்வாகம் சார்பில் ₹12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், சமுதாய கூடத்தில் சமையல் அறை, சாப்பாட்டு அறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. இதன் பிறகு, 2007ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் இந்த கூடத்தை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.