நகராட்சி அதிகாரிகள் அடாவடியால் 7 ஆண்டாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆவடி:  ஆவடி நகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கோபாலபுரம், தென்றல் நகர், கோபாலபுரம் மேற்கு, குறிஞ்சிமா நகர், சித்தேரிகரை, முல்லை நகர், மாங்குளம், தெற்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் பிறந்த நாள், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் விழா, வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி வந்தனர்.  இதற்காக ஏழை மக்கள் பல ஆயிரம் செலவு செய்ய வேண்டியது உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக கடந்த 2002ம் ஆண்டு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அப்போதைய சட்டமன்ற நியமன உறுப்பினர் சாண்ட்ரா டான் கிரேவால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமுதாய கூடம் கட்ட ₹6 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.அதன்படி 2004-05ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் பட்டாபிராம், கோபாலபுரத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள்  சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, சமுதாய கூடத்தை விரிவுபடுத்திட நகராட்சி நிர்வாகம் சார்பில் ₹12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், சமுதாய கூடத்தில் சமையல் அறை, சாப்பாட்டு அறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கூடுதல் அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டன. இதன் பிறகு, 2007ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் இந்த கூடத்தை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு பிறகு சமுதாய கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த நகராட்சி நிர்வாகம் அதிக கட்டணத்தை நிர்ணயித்தது. இதனால், அங்கு நிகழ்ச்சிகள் நடத்த யாரும் முன்வரவில்லை. எனவே சமுதாய கூடத்தை நகராட்சி  நிர்வாகம் இழுத்து மூடிவிட்டது. கடந்த 7 ஆண்டுக்கு மேலாக சமுதாய கூடம் மூடியே கிடப்பதால் கட்டிடம் பாழாகி வருகிறது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாய கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடப்பதால் எந்த பயனும்  இல்லை.எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து பட்டாபிராம் கோபாலபுரத்தில் உள்ள மூடிக்கிடக்கும் சமுதாய கூடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சமுதாய கூடத்தை குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தோம். ஆனால்  அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் ஏழை மக்கள் தங்களது வீடுகளிலேயே மிகுந்த சிரமங்களுக்கு இடையே சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்’’ என்றனர்.

Related Stories: