×

பள்ளிப்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்

சேலம், மே 25: சேலத்தை அடுத்த பள்ளிப்பட்டியில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சேலம்-வலசையூர் சாலையில் பள்ளிப்பட்டி உள்ளது. இந்த ஊரின் பஸ் ஸ்டாப்பையொட்டி, தாசநாயக்கன்பட்டி ஊருக்கு செல்லும் வழிப்பாதை உள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாசநாயக்கன்பட்டி ஊருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், புதியதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து புதிய தார்சாலை அமைக்க, ஏற்கனவே இருந்த சாலை 3 மாதங்களுக்கு முன்பு பெயர்க்கப்பட்டது. பின்பு, புதியதாக தார்சாலை அமைக்க சாலையோரம் கருங்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் 3 மாதமாகியும் சாலை அமைக்காததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். 3மாதமாக கிடப்பில் உள்ள இப்பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று ஊர்மக்கள் வலியுறுத்தினர். இது சம்பந்தமான செய்தி கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதையடுத்து அங்கு கொட்டப்பட்டுள்ள கருங்கல் ஜல்லியை சமப்படுத்தி, தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Tags : school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி