சேலம், மே 25: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தாகம் தீர்க்க வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில், நீண்ட நாட்களாக குடிநீர் வராததால் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகளின் தாகம் தீர்க்க, நுழைவு வாயில் அருகே குடிநீர் குழாய் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்குழாய்களில் குடிநீர் வரவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் தாகம் தீர்க்க குழாயை திறந்ததால், அதில் குடிநீருக்கு பதில் காற்று மட்டுமே வருகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.