×

புதிய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள்

சேலம், மே 25:  சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தாகம் தீர்க்க வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில், நீண்ட நாட்களாக குடிநீர் வராததால் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகளின் தாகம் தீர்க்க, நுழைவு வாயில் அருகே குடிநீர் குழாய் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்குழாய்களில் குடிநீர் வரவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் தாகம் தீர்க்க குழாயை திறந்ததால், அதில் குடிநீருக்கு பதில் காற்று மட்டுமே வருகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், சரியான குடிநீர் வசதி இல்லை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் வெளியூர் பயணிகள் தாகம் தீர்க்க சென்றால், குழாயில் குடிநீர் வருவதில்லை. இதனால், கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி தாகம் தணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பெரும்பாலான பயணிகள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடிநீருக்காக ₹25 செலவு செய்ய முடியாது. எனவே, புதிய பஸ் ஸ்டாண்டில் 24 மணிநேரமும் சீரான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Passengers ,bus stand ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...