திருச்செங்கோடு, மே 25: திருச்செங்கோடு சின்னதெப்பக்குளத்தில் குப்பை கழிவுகள் மற்றும் மரம் செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு நகரின் மையத்தில் பழைய பஸ் நிலையத்தின் எதிரில் சினன தெப்பக்குளம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் நோக்கில், தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. தெப்பக்குளத்தின் நான்கு பக்கமும் படிக்கட்டுகள் உள்ளன. மழைக்காலத்தில் தெப்பத்தில் நீர் அதிகமானால் வடக்குப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுவின் சிற்ப வாயில் வழியாக உபரிநீர் வெளியேறிவிடும் வகையில் அமைத்துள்ளனர்.
தெப்பக்குளத்தில் மழைநீர் தேங்கினால் தொண்டிகரடு, வடிவேல்பிள்ளை தெரு, தெப்பக்குள சாலை ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் உயரக்கூடும். இந்நிலையில் தெப்பக்குளத்தின் கிழக்கப்புறத்தில் தூண்கள் அமைத்து, நகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் பாறைகள் மட்டுமே தெரிகின்றன.
தேங்கியுள்ள சிறிதளவு நீரும் பாசி பிடித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. மேலும், குளத்தின் உட்புறம் மரம், செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகின்றது. இதனால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. மேலும் குளத்தில் பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். குடிமகன்கள் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசிச்செல்கின்றனர். கோடையிலும் தண்ணீர் வற்றாத இந்த சின்ன தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தி, தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.