×

மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுக்கு சேதமான 90 மின்கம்பங்கள் மாற்றம்

கிருஷ்ணகிரி, மே 25:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு சேதமான 90 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன், பரவலாக மழை பெய்தது. பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அதிகளவில் மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்களை அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் கூறியது: மாவட்டத்தில் அஞ்செட்டி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுக்கு 90 மின்கம்பங்கள் சேதமானது. இதனை தொடர்ந்து, சேதமான மின்கம்பங்கள் அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு புதிய மின்கம்பங்களை அமைத்து வருகின்றனர். மேலும், பல இடங்களில் சேதமான மின்வயர்களும் மாற்றப்பட்டது. காவேரிப்பட்டணம் பகுதிகளில் வயல்வெளிகளில் மின்கம்பங்கள் சேதமானதால், மாற்றிமைக்கும் பணிகள் சற்று தாமதமானது. அதுவும் 2 நாட்களில் சரி செய்யப்பட்டது.

மழைக்காலங்களில் இடி, மின்னலின் போது, குடிசை, மரம், பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் தஞ்சமடைய வேண்டாம். மின்சாதன பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மின்கம்பங்கள் சாய்ந்தால், வயர்கள் அறுந்து விழுந்து இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ, இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது. மின்பாதிப்புகளை மின்வாரிய ஊழியர்கள் மூலம் மட்டுமே சரிசெய்ய வேண்டும்.

நுகர்வோர்கள் மின்உருகி இழை (பியூஸ்) மாற்றும் பொழுது உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்பாதைகளுக்கு கீழே இயங்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின்வேலிகள் அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களை, அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...