போச்சம்பள்ளி, மே 25: மத்தூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிச் செல்லா குழந்தைகள் கண்டறிதல் மற்றும் புதிய மாணவர் சேர்க்கை முகாம் மத்தூர் இருளர் குடியிருப்பு பகுதியில் நடந்தது. இதையொட்டி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தார். இதில், கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, மாணவர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.