தர்மபுரி, மே 25: வேலூரில் உள்ள பளுதூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பளுதூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு மையம் பளுதூக்கும் விளையாட்டு மையம் சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சேர்வதற்கு மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு சத்துவாச்சாரியில் நடக்கிறது. இந்த விடுதியில் 7ம் வகுப்பில் சேர, 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
01.01.2006 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 8ம் வகுப்பில் சேர, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 9ம் வகுப்பில் சேர, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 11ம் வகுப்பில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்பில், முதலாமாண்டு சேரும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.20019 அன்று 20 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேரும் மாணவர்கள், இளநிலை பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.20019 அன்று 23 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பளுதூக்குதல் முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர அதற்கான உரிய படிவங்களை இணையதள முகவரியில் பூர்த்தி செய்து வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.