திருப்பூர், மே25:திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. திருப்பூர், பி.என் ரோடு மில்லர் ஸ்டாப் அருகில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. அத்துடன், 100க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களும் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால், சாக்கடையில் புழுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் உணவு உட்கொள்ளக்கூட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிவுள்ளனர். மேலும், வெயில் காலம் என்பதால் ஜன்னல்களை திறந்து வைக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. இதுகுறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். இப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.