×

போக்குவரத்து நெரிசலால் சிக்கித்தவிக்கும் மார்க்கெட் ேராடு

பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி நகரில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஒன்றான மார்க்கெட்ரோட்டில், பகல், இரவு என தொடர்ந்து வாகனங்கள் சென்று வருகிறது. மேலும், கேரள மாநிலம் திருச்சூர், கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்லும் முக்கிய ரோடாக அமைந்துள்ளது. இந்த ரோட்டின் இருபக்கமும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் நிறைந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க, திருவள்ளுவர் திடலில் இருந்து தெப்பக்குளம் வீதி-வெங்கட்ரமணன் வீதி சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புவரை அப்பகுதியில் போலீசார் வாகன சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அண்மை காலமாக மார்க்கெட் ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், விதிமீறி கனரக வாகனங்கள் செல்வது தொடர்ந்துள்ளது. மேலும், வணிக வளாகம் முன்பு ரோட்டை மறைத்தவாறு வாகனங்களை நிறுத்தி செல்வதால், அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சிலநேரம் எதிர் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து மிகுந்த மார்க்கெட் ரோட்டை மறித்தவாறு வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை